Home Article தெருக்கூத்து – வடக்கத்தி பாணி

தெருக்கூத்து – வடக்கத்தி பாணி

by G. Palani
0 comment

காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒருபகுதி  மற்றும் திருவள்ளுர், மாவட்டத்தின் ஒரு பகுதி சார்ந்து இயங்கும் வடக்கத்தி பாணிக்கூத்து ஒப்பனையில் கேரளத்து கதிகளியோடும் கர்நாடகத்து யக்ஷகானத்தோடும் இணைத்துப் பார்க்கக்கூடியது. நேர்த்தியான நிகழ்த்தல் முறையைக் கொண்ட பாணியாக வடக்கத்திக் கூத்தைக் குறிப்பிடுகின்றனர். கண்ணாடிகள் பதிக்கப்பட்ட பிரமாண்டமான கிரீடங்களும் புஜக்கட்டைகளும் மார்புப் பதக்கங்களும் காது கட்டைகளும் ஆண்பாத்திரங்களின் அணிகலன்கள். இடுப்பில் கட்டப்படும் டவுறு (வட்டுடுப்பு) அதற்கு மேல் கட்டிக்கொள்ளும் அரைப் பாவாடை அத்தனையும் அழகுற வடிமைத்து தயாரிக்கப்படுபவை. முகத்தில் தீட்டப்படும் வண்ணங்களும் தெற்கத்தி, மேற்கத்தி பாணிக் கூத்துகள் போல் அடிப்படை வண்ணங்களோடு நின்று போவதில்லை. ஆண் பாத்திரங்களான அரசன், இளவரசன் போன்ற நாயக, எதிர்நாயகப் பாத்திரங்களுக்கு முகத்தில் ‘மாலுகள்’ (வண்ண வளைகோடுகள்) வரையப்படுகின்றன. இவை, அப்பாத்திரங்களின் உள்ளார்ந்த தன்மையை வெளிக்காட்ட உதவுவன. இத்தகைய ஒப்பனையோடு நிற்கும் வடக்கத்திப் பாத்திரத்தைத் தெற்கத்தி, மேற்கத்திப் பாத்திரத்தோடு ஒப்பிட முடியாதுதான். இம்மாதிரியான ஒப்பனை மரபிற்கு, காஞ்சிபுரம் சார்ந்த சிற்பக்கலை வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு.

இசைக்கருவிகளுள் முகவீணை, ‘பெடல் ஆர்மோனியம்’ வடக்கத்தி பாணிக்கான சிறப்பு இசைக்கருவிகளாகக் கருதப் பட்டாலும் மேற்கத்தி பாணிக்கூத்துக்களிலும் முகவீணை பயன்படுத்தப்படுகிறது.  கூத்துப் பாடல்களுக்குப் பயன்படுத்தப் படும் மெட்டுக்களை, இராகங்கள் அடிப்படையிலேயே வடக்கத்திக் கூத்தர்கள் குறிப்பிடுகின்றனர். செவ்வியல் இசைக் கட்டமைப்போடு வடக்கத்திக் கூத்தில் பயன்படுத்தப்படும் இராக – தாள மரபு முழுமையாக இணைந்து வரவில்லை என்றாலும் இராகங்களின் அடிப்படையில்தான் இந்த வகைக்கூத்தின் இசை செயல்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

You may also like

Leave a Comment