Home Article தெருக்கூத்து – தெற்கத்தி பாணி

தெருக்கூத்து – தெற்கத்தி பாணி

by G. Palani
0 comment

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு பகுதி, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பகுதி இடங்களில் பழம் மரபு சார்ந்த பல்வேறு கூறுகளை தன்னகத்தே கொண்டு இயங்கி வருகிறது தெற்கத்திக்கூத்து. இவ்வகைக் கூத்து பழம் மரபு சார்ந்தது  என்பதற்கு  அதன் ஒப்பனை, ஆடை ஆபரணங்களின் வடிவமைப்பு, அவற்றின் பயன்பாடு, குறிப்பாக இடுப்பில் கட்டப்படும் வட்டுடுப்பு முறை போன்றவை சான்றுகளாக உள்ளன. சேலைகளை ஒன்றன் மேல் ஒன்றாகக் சுருக்கி இடுப்பில் டவுறாக – வட்டுடுப்பாகக் கட்டிக் கொள்கின்றனர். தொழில் முறையாகக் கூத்து வளராத காலத்தில் , பயில் முறைக் கலைஞர்கள் – அதாவது புதிதாகக் கற்றுக்கொண்டு கூத்து ஆடும் கலைஞர்கள் அந்தந்த கிராமத்தவர்களிடமே சேலை, பாவாடை, சட்டை போன்றவற்றைப் பெற்று கூத்துப் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இன்றும் பல ஊர்களில் இம்முறை தொடர்வதைப் பார்க்கலாம். இது, அந்தந்தப் பகுதிவாழ் சமூகத்தினரையும் கூத்தோடு இணைத்துக்கொண்டு செயலாற்றும் தன்மையை உணர்த்துகிறது. தற்போது தெற்கத்தி தொழில்முறைக் கூத்தர்கள் அத்தகைய ஆடை, ஆபரணங்களை சொந்தமாக வைத்துள்ளனர். மேலும் தெற்கத்திக் கூத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளான மிருதங்கம், சுருதிப்பெட்டி, வலுவான பெரிய இரண்டு தாளங்கள், ராக – தாள வேறுபாடு இல்லாத வர்ணமெட்டுக்கள், பாத்திரங்கள் நின்ற இடத்திலேயே வேகமாகச் சுற்றும் கிறிக்கி முறை, தாள இசையோடு தொடர்ந்து வசனம் பேசும் முறை ஆகியன இக்கூத்தின் ஆதித்தன்மைகளைக் குறிக்கும் சில சான்றுகள். இவற்றை ஆதித்தன்மைகள் என்று குறிப்பிடுவதற்குக் காரணம், பிற கூத்துப் பாணிகளில் பயன்படுத்தப்படும் ‘நவீன’ நுட்பமான கூறுகள் இதில் இல்லாமல் இருப்பதேயாகும். அதாவது, ஒப்பனைக்கு எனத் தனியாக அன்றி, கிடைத்த வண்ணத்தை முகத்தில் பூசிக்கொண்டும் மக்களிடமிருந்து கிடைக்கும் ஆடைகளை உடுத்திக்கொண்டும் பாத்திரங்களாக வலம் வருதல் என்பதை சமூகத்தின் கூட்டுச் செயல்பாடு சார்ந்ததாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. மேலும் ‘சூரன்’ போன்ற எதிர் நாயகப் பாத்திரங்களுக்கு, கோழி இறகுகளைப் பயன்படுத்துதலை ஒரு தொன்மைத் தன்மை சார்ந்த ஒன்றாகக் கருத முடியும். இவை போன்ற ஒப்பனை முறை தெற்கத்திக் கூத்து மரபில் மட்டும் இன்றளவும் இருந்து வருகிறது. மேலும் இவை எவையும் நாசூக்குத் தன்மை கொண்டவையாக அல்லாமல் ‘கரடுமுரடாக’ இயங்கும் தன்மையைக் கொண்டுள்ளன. வடக்கத்தி பாணியின் ஒப்பனை போன்றோ, இசை போன்றோ, ஆடை ஆபரணங்கள் போன்றோ பொலிவு பெற்றதாகக் தெற்கத்திக் கூத்து மரபு இல்லை என்பது இங்கு நினைவில் கொள்ள வேண்டியது.

‘இப்படி மங்கலான அழுக்கேறியது போன்ற துணிகளை அணிந்துகொண்டு இந்த ‘நாகரிக’மான உலகத்தில் கூத்து ஆடிக் கொண்டிருக்கிறார்களே… அவர்களுக்கான பொருளாதார நெருக்கடி இதற்குக் காரணமாக இருக்குமோ?’ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், கள ஆய்வில் காரணம் அதுவல்ல என்பதும் இவ்வாறான ஆடை, அணிகல்கள்தான் அந்த பாணிக்கான மரபு என்பதும் புலனாகியது. ஒரு நாளைக்கு இருநூற்று ஐம்பது  முதல் ஐந்நூறு ரூபாய், அதற்கு மேலேயும் ஊதியம் பெறும் கூத்துக் கலைஞர்களும் இதே வகையான ஆடை, ஆபரண ஒப்பனையுடன் தான் கூத்து நிகழ்த்தி வருகின்றனர்.

மேலும், ‘பொலிவாக ஆடை ஆபரணங்கள், ஒப்பனைகள் செய்து கொள்ள இவர்களுக்குத் தெரியவில்லை’ என்றோ ‘அத்தகைய கூத்துக்களை இவர்கள் பார்த்ததில்லை’ என்றோ சொல்லிவிட முடியாது. வடக்கத்தி பாணிக் கூத்துகள் செல்வாக்கு செலுத்தும் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீபெருமந்தூரில் சில தெற்கத்திபாணிக் கூத்துக் குழுக்கள் உள்ளன. ஆனால், அவர்களின் ஒப்பனையிலோ நிகழ்த்தல் முறையிலோ வடக்கத்தியின் சாயலைக் கூட காணமுடியவில்லை. ஆக, தெற்கத்திக் கூத்துக்கான ஒப்பனையும் இசையும் ஆட்டமரபும் அந்த பாணிக்கான பார்வையாளர்களுக்குரியன என்பது தெளிவாகிறது.

தெற்கத்தி பாணிக்கூத்தை நிகழ்த்திக்கொண்டு வரும் கூத்தர்கள் பெரும்பாலும் ஆதிதிராவிடர், வண்ணார் மற்றும் வன்னியர் சமூத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். சமகாலத்தில் கூத்து வாத்தியார்களாகவும் மேற்கண்ட சமூகத்தவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், இவர்கள் கூத்து நிகழ்த்திக் கொண்டு வரும் தலைமுறைகள் எத்தனை என்பதைக் கணக்கில் கொண்டு ஆராயுமிடத்து, தெற்கத்தி பாணியில் ஆதிதிராவிட சமூகத்து கூத்து வாத்தியார்கள் பெரும்பாலும் நான்கு தலைமுறைகளுக்கு மேலாகக் கூத்து நிகழ்த்தி வருவதாகக் கூறுகின்றனர்.

You may also like

Leave a Comment